×

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் நடந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நிருவாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG01-க்கான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது. விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ. நீளத்தில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மூழுவீச்சில் நடைபெற்ற வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ) நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (UG-01 & UG-02) ஒவ்வொன்றிலும் தோராயமாக 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் M/s ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான M/s ஹெரென்க்னெக்ட் என்ற ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG-01 தொகுப்புக்கான 3-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனையானது சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள HK தொழிற்சாலையில் பொது ஆலோசகர்கள் M/s AEON கன்சோர்டியத்தின் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பெயர் ஃபிளமிங்கோ (பூநாரை பறவை) (S1352A), இது 6.670 மீ துளை விட்டம் மற்றும் 110 மீ நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தின் மொத்த எடை தோராயமாக 700 மெட்ரிக் டன்கள் ஆகும். இது இப்போது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது, மேலும் 2023 ஆகஸ்டு மாதத்தில் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் செலுத்துவதற்கு ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம்-4-ல் பூமிக்கு அடியில் 29 மீ ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, கலங்கரை விளக்கம், கட்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ இரயில் நிலையம் வழியாக சுரங்கம் செய்யப்பட்டு இறுதியாக நவம்பர் 2025-இல் போட் கிளப்பை வந்தடையும்.

The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro administration ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது